FLASH NEWS

***HONRABLE MINISTER FOR INDUSTRIES THIRU P.THANGAMANI DELIVERS THE SPECIAL ADDRESS and Dr.E.BALAGURSAMY MEMBER AND STATE PLANNING COMMISSION and HIGH LEVEL SYLLABUS COMMITTEE TAMIL NADU WILL PRESIDE OVER THE MEETING ,SEP 29TH AT VETRI VIKAS HSS ,MALLUR NAMAKKAL ALL MATHEMATICS PG TEACHERS ARE REQUESTED TO ATTEND THE MEETING (TNMPGTA) @@@ OUR AIM IS TO GET 50 MARKS in MATHS PRACTICAL @@@@

Saturday 13 April 2013

கடினமான கணித பொதுத் தேர்வுகள்: மாணவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையா?

First Published : 13 April 2013 02:29 AM IST
கடந்த 2005-ம் ஆண்டில் என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு, மாணவர்களின் சிந்தனையை கணிதமயமாக்குவதே கணித பாடத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளது.
கணிதப் பாடத்தின் வழியாகக் கற்கும் சிந்தனை முறையை வைத்தே ஒரு மாணவனால் பிற்காலத்தில் பிரச்னைகளைத் தீர்க்கும் அறிவைப் பெற முடியும் என்பதால் கணிதத்தை பயமின்றி கற்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் தேர்வுகள் சவாலாகவும், கருத்துகளை அறிந்து திறமையான முறையில் மதிப்பீடு செய்யும்படியும் இருக்க வேண்டும் என்றாலும் கணிதத்தில் தோல்விக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் வகையிலும் பாடங்கள் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் துரதிருஷ்டவசமாக சில ஆண்டுகளாக தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் உள்ள கணித பாடத் திட்டங்கள் யாவும் மாணவர்களை அச்சமூட்டும் விதமாகவே அமைந்துள்ளன. கணிதத்தின் அனைத்துப் பிரிவுகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மேல்நிலைக் கல்வியில் பாடத் திணிப்பு நடைபெற்றுள்ளது என்ற கணித ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டு, பாட நூலின் இறுதி ஆண்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழக மாணவர்களுக்கான கணிதப் பாடங்கள் அர்த்தமுள்ளதாகவும், ஏற்கெனவே கற்றதை சீர்தூக்கிப் பார்த்து, சிந்தித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும், கணிதத்தின் பல வகையான செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்குமானதாக இல்லாமல், அண்ணா பல்கலைக்கழகம் அல்லது நாட்டின் மற்ற பிற தொழில்நுட்பக் கழகங்களில் சேருவதற்காகவும் அங்குள்ள கணிதப் பேராசிரியர்களின் பணியை எளிதாக்குவதற்காகவும் மட்டுமே என்ற விதத்தில் அமைந்திருப்பதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த பாடத் திணிப்பானது மாணவர்களுக்கு கணிதத்தின் மீது ஆவலைத் தூண்டுவதற்கு பதிலாக வெறுப்பையே அதிகரித்திருக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி. கணித பாடத்தைப் பொறுத்தவரை பொதுத் தேர்வு வினாக்களின் தர அடிப்படை 12 சதவீதம் கடினம், 28 சதவீதம் நடுத்தரம், 60 சதவீதம் சுலபம் என்ற அளவில் இருக்க வேண்டும் என ப்ளூ பிரிண்ட் கூறுகிறது. ஆனால் நடந்து முடிந்த தேர்வுகளிலோ ப்ளூ பிரிண்டுக்கு மாறாக கடின வினாக்களே அதிகளவில் இடம்பெற்றிருந்தன.
தேர்வு எழுதிய சுமார் 11 லட்சம் பேர்களில் சராசரி நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம் என்பதால் கணிதப் பாடத்தில் தேர்ச்சி விகிதம் குறையும் வாய்ப்பு அதிகம் என்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி கணித ஆசிரியர் டேனியல்.
கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட வினாக்கள் அடங்கிய கையேட்டை மாணவர்களுக்கு அரசு வழங்கியது.
ஆனால் கணிதத்தில் அந்த கையேட்டில் முக்கிய வினாவாக குறிப்பிடப்பட்டதில் இருந்து ஒரு வினாகூட இடம் பெறவில்லை. இந்நிலையில் அந்த கையேட்டை மட்டுமே நம்பிப் படித்த மாணவர்களின் கதி என்ன ஆவது என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
2 ஆண்டுகள் பயிலும் தனியார் பள்ளி மாணவர்கள்: அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு இறுதித் தேர்வு விடைத்தாள்கள் வேறு பள்ளிகளில் திருத்தப்படுகின்றன. எனவே அங்கு ஆண்டு முழுவதும் 11ஆம் வகுப்பு பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் தனியார் பள்ளிகளில் அந்த முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே பிளஸ் 2 பாடங்களை அங்கு 2 ஆண்டுகள் நடத்துகின்றனர்.
ஆனால் அரசுப் பள்ளிகளிலோ டிசம்பர் 10ஆம் தேதிக்குள் 2 புத்தகங்களிலும் உள்ள சுமார் 1,000 கணக்குகள், 600 பயிற்சிக் கணக்குகள் ஆகியவற்றை எங்களுக்கு கிடைக்கும் சுமார் 300 மணி நேரத்தில் எப்படி நடத்தி முடிப்பது என்று கேள்வி எழுப்புகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் கல்யாணராமன்.
11ஆம் வகுப்பில் தொகை நுண் கணிதத்தில் மட்டும் 392 கணக்குகள் உள்ளன. பிளஸ் 2-வில் தீபாவளி விடுமுறை, மழைக் காலம், அரையாண்டுத் தேர்வு, செய்முறைத் தேர்வு போன்றவை அடுத்தடுத்து வருவதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான தொடர்பு அரிதாகி விடுகிறது என்கிறார் அவர்.
மேல்நிலைப் பள்ளி பாடத்தை நடத்தும் ஆசிரியர் ஒரு கணக்கிற்கு தீர்வு காண 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது. அதையே மாணவர் செய்யும்போது 45 நிமிடங்கள் ஆகின்றன.
80 முதல் 100 மாணவர்கள் கொண்ட அரசுப் பள்ளியின் கணித வகுப்பில் ஒரு பாடவேளையில் ஒரு கணக்கை மட்டுமே தெளிவாக நடத்த முடியும் என்ற நிலையில், 150 பாட வேளைகளில் 1,500-க்கும் அதிகமான கணக்குகளுக்கு தீர்வு காண இருவருக்குமே நேரம் இருக்காது.
வினாத்தாள் தயாரிப்பது யார்? அது மட்டுமன்றி மற்ற பாடங்களுக்கு 3 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு எழுதும் ஒரு மாணவர், கணிதத்தில் 200 மதிப்பெண்களுக்கும் அதே 3 மணி நேரத்தில் எழுத வேண்டிய நிலை உள்ளது.
பாட ஆசிரியர்களுக்கு மட்டுமே கணிதத்தின் கஷ்டங்கள் புரியும் என்ற நிலையில் பொதுத் தேர்வுக்கான வினாத்தாளை கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் தேர்வு செய்வதே கடந்த தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு காரணம் என்கிறார் மூத்த கணித ஆசிரியர் கி.பழனி
வேலு.
வழக்கமாக வினாத்தாள் எழுதவும், தேர்வுக்குப் பிறகு அதற்கான விடைகளை எழுதவும் மாநிலம் முழுவதிலும் இருந்து நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவார்கள்.
ஆனால் சில ஆண்டுகளாக அவ்வாறு வரும் ஆசிரியர்கள் கொடுக்கும் வினாத்தாளும், விடைகளும் புறக்கணிக்கப்பட்டு பாடநூல் எழுதிய பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கே கல்வித் துறை அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பதாகவும் ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கற்றலின் இனிமையை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டிய நிலையில் இருப்பவர்கள், தங்களின் அறிவுத்திறனை மாணவர்களுக்கு காட்டும் நோக்கில், அரசுப் பள்ளிகளின் நிலை, ப்ளூ பிரிண்ட், மாதிரி வினாக்கள் உள்ளிட்ட விஷயங்களை புறக்கணித்து கணிதம் என்றாலே அச்சம் தரக்கூடிய ஒரு பாடம் என்ற மாயையை ஏற்படுத்துவது கிராமப்புற, சராசரி மாணவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைக்குச் சமமானது என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் சிங்காரவேலு.
ஆசிரியர்களுக்கு கடிதம்: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 கணிதத் தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் ஏராளமானவர்கள், கடின வினாத்தாள் காரணமாக மனமுடைந்து எழுதிய சில விடைகள் மீதும் கோடு கிழித்து அடித்துள்ளனர்.
மேலும் பலரோ திருத்தும் ஆசிரியர்களுக்கு உருக்கமான கடிதங்களையும் எழுதி வைத்திருப்பதாக விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
மேல்நிலை கணிதத்துக்கான புதிய பாடத்திட்டம் எழுதும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இனியாவது தற்போதுள்ள சுமைகளைக் குறைத்தும், வினாத்தாள் தயாரிப்பவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தும், ப்ளூ பிரிண்டின் அடிப்படையில் மாணவர் நேய வினாத்தாள் தயாரிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஆசிரியர், மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment